ஜூலை,23,2016. உத்தர பிரதேச அரசுப் பள்ளி மற்றும், கல்லூரிகளில், ஆசிரியர் மற்றும் விரிவுரையாளர் பணியிடங்களுக்காக, முறைப்படி முதல்முறையாக விண்ணப்பித்துள்ளனர் திருநங்கையர்.
உத்தரப் பிரதேசத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள் மற்றும் இன்டர்மீடியேட் கல்லூரிகளில் உள்ள, 9,000 காலிப்பணியிடங்களை நிரப்ப மாநில மேல்நிலைக் கல்வி பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
இதில், உதவி ஆசிரியர் பணிக்காக, 47 திருநங்கைகளும், விரிவுரையாளர் பணிக்காக 22 திருநங்கைகளும் விண்ணப்பித்துள்ளனர். வாரியத்தின் சார்பில் இதுவரை ஆசிரியர் பணிக்காக 6,26,790 விண்ணப்பங்களும், விரிவுரையாளர் பணிக்காக 3,93,882 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
பெறப்பட்டுள்ள மொத்த விண்ணப்பங்களில், திருநங்கைகளின் விண்ணப்பங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், ஆசிரியர் பணியில் சேர அவர்கள் உரிய தகுதியுடன் முன்வந்திருப்பதே முக்கியமானதாக கருதப்படுகிறது.
பணியில் சேருவதற்காக, தங்களின் அடையாளத்தை மறைக்காமல், சமுதாயத்தில் தங்களுக்கான சட்ட உரிமையைக் கேட்டுப்பெறும் வகையில், வெளிப்படையாக விண்ணப்பங்களை அவர்கள் சமர்ப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது என, தேர்வு வாரியத்தின் செயலாளர் ரூபி சிங் அவர்கள் குறிப்பிட்டார்.
ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |