2016-07-31 17:01:00

பானமா நாட்டில், 2019ம் ஆண்டு, இளையோர் நாள் சிறப்பிக்கப்படும்


ஜூலை,31,2016. உலக இளையோர் நாள் நிகழ்வுகள் இறுதித் திருப்பலியில் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய நண்பகல் மூவேளை செப உரை:

உலக இளையோர் நாள் நிகழ்வுகளை, திறம்பட ஏற்பாடு செய்திருந்த கர்தினால் Stanisław Dziwisz அவர்களுக்கும், உடன் உழைத்த அனைவருக்கும் நெஞ்சார நன்றி கூறுகிறேன். இந்நாட்களில், கிரக்கோவ் நகரில் நிலவிய உற்சாகத்தை, புனித 2ம் ஜான்பால், விண்ணகத்திலிருந்து கண்டு மகிழ்ந்திருப்பார்.

உலகினர் அனைவரும் உடன்பிறப்புக்களே என்ற உணர்வை இந்நாட்களில் நாம் இங்கு உணர்ந்தோம். செபத்தின் வல்லமையை நாம் உணர்வதற்கு இறைவன் துணை செய்தார். இந்நாட்களில் நீங்கள் பெற்றுக்கொண்ட கொடைகளை இழந்துவிட வேண்டாம் என்று, அன்னை மரியா உங்களுக்கு நினைவுறுத்துகிறார்.

1985ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் உருவாக்கிய இந்த அற்புத முயற்சி, அடுத்த இரு ஆண்டுகள், மறை மாவட்ட அளவில் உலகெங்கும் தொடர்ந்து நடைபெறும். 2019ம் ஆண்டு, உலக இளையோர் நாள் நிகழ்வுகள், பானமா நாட்டில் நடைபெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மரியன்னையின் பரிந்துரையோடு, தூய ஆவியாரின் வழி நடத்துதலுக்காக நாம் மன்றாடுவோம். நம் அனைவரையும் அவர் இறைவனின் இரக்கத்தைப் பறைசாற்றும் தூதர்களாக மாற்றுவாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.