2016-08-18 15:39:00

மடு மாதா திருத்தலம்-கர்தினால் இரஞ்சித் தலைமையில் திருப்பலி


ஆக.18,2016. ஆகஸ்ட் 15, அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவன்று, இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்தில், மடுமாதா திருத்தலத்தில், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் தலைமையில், ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நிறைவேறியது.

மன்னார் அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, கால் (Galle) ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்கே, கண்டி ஆயர் வியான்னி பெர்னாண்டோ மற்றும் அனந்தபுரா ஆயர் நோர்பெர்ட் அந்த்ராதி ஆகியோர் இக்கூட்டுத் திருப்பலியில் கலந்துகொண்டனர்.

இப்பெருவிழாவையொட்டி இத்திருத்தலத்தில் நடைபெற்ற நவநாள் காலத்தில், இயேசு சபை புலம் பெயர்ந்தோர் பணியில் ஈடுபட்டுள்ள அருள் பணியாளர், அலெக்ஸ் யாகூ அவர்கள், இரக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மறையுரைகளை வழங்கினார்.

ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான மக்கள் கூடிவரும் மடுமாதா திருத்தலம், இலங்கையின் மிக முக்கியத் திருத்தலம் என்றும், இலங்கை உள்நாட்டுப் போரில் 1999ம் ஆண்டு, இவ்வாலயத்தில் வீசப்பட்ட குண்டுகளால், 44 பேர் இறந்தனர் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

2015ம் ஆண்டு, சனவரி மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலங்கைக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது, மடுமாதா திருத்தலத்திற்கு ஒரு திருப்பயணியாகச் சென்று அன்னையை வணங்கி வந்தார் என்பது, குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.