2016-08-25 16:20:00

கொலம்பிய அமைதி ஒப்பந்தத்திற்கு ஐ.நா. பாராட்டு


ஆக.25,2016. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்றுவந்த ஆயுத மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

கியூபா நாட்டு ஹவானாவில், கொலம்பிய அரசும், FARC-EP புரட்சிக்குழுவும் கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தம் குறித்து, தனது பாராட்டைத் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதற்கு ஐ.நா. தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் என உறுதியளித்துள்ளார்.

இந்த ஆயுத மோதல்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதி வழங்குதல், உறுதியான மற்றும் நிலைத்த அமைதியைக் கட்டியெழுப்ப உதவுதல், சமூகப் புறக்கணிப்பைக் களைதல் போன்ற விவகாரங்களில், இணைந்து செயல்பட, கொலம்பிய அரசும், FARC புரட்சிக்குழுவும் உறுதியளித்துள்ளன.

கொலம்பிய அரசுக்கும், FARC-EP புரட்சிக்குழுவுக்கும் இடையே ஹவானாவில், 2012ம் ஆண்டு நவம்பரில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் முதலில் தொடங்கின. அதைத் தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பயனாக, வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் தற்போது கையெழுத்திடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் உட்பட பல தலைவர்கள் இதற்கு, தங்களின் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளனர்.

கொலம்பிய நாட்டில் இடம்பெற்ற இந்த நீண்டகால உள்நாட்டுப் போரில், இரண்டு இலட்சத்து இருபதாயிரம் பேர் இறந்துள்ளனர் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.

ஆதாரம் : UN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.