ஆக.26,2016. இத்தாலியில் கடும் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனது ஆறுதலையும், ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை, ஜார்ஜியா நாட்டு ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ முதுபெரும் தந்தை 2ம் இலியா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இவ்வெள்ளியன்று திருத்தந்தைக்கு அனுப்பியுள்ள இக்கடிதத்தில், அனைத்து ஜார்ஜிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையினர் மற்றும் தனது பெயரால், ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் முதுபெரும் தந்தை 2ம் இலியா.
பெருஜியா மற்றும் அதற்கருகிலுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. இத்துன்பம் நிறைந்தவேளையில், உங்களுடைய நாடு மற்றும் நாட்டு மக்களின் வேதனைகளில் நாங்களும் பங்கெடுக்கிறோம் என எழுதியுள்ளார் முதுபெரும் தந்தை 2ம் இலியா.
இத்தாலிக்கும், உலகினர் அனைவருக்கும் இறைவன் தம் அமைதி மற்றும் இரக்கத்தை அருள்வாராக என்றும் அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கத்தினால் குறைந்தது 267 பேர் இறந்துள்ளனர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 270ஐத் தாண்டியுள்ளது. இடிபாடுகளில் சிக்கி இன்னும் உயிருடன் இருப்பவர்களை, மீட்புக் குழுவினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |