ஆக.27,2016. போர் மற்றும் வன்முறைக்குத் தப்பித்து, வருங்கால வாழ்வில் அமைதி மற்றும் நம்பிக்கையைத் தேடிவரும் மக்களுக்கு உதவும் ஓர் இத்தாலிய மறைமாவட்டத்திற்கு, தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் வெந்திமிலியா-சன்ரேமோ மறைமாவட்டம் எதிர்நோக்கும் புலம்பெயர்வோர் மற்றும் அகதிகள் பிரச்சனை குறித்தும், அம்மக்களுக்கு இம்மறைமாவட்டம் ஆற்றிவரும் உதவிகள் குறித்தும், அம்மறைமாவட்ட ஆயர் அந்தோனியோ சுயெத்தா அவர்கள், திருத்தந்தைக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அக்கடிதத்திற்குப் பதில் எழுதிய திருத்தந்தை, இரக்கத்தின் நற்செய்தியை மகிழ்வோடு தெருக்களுக்கு எடுத்துச் சென்று, எப்போதும் நம்பிக்கையின் சான்றுகளாக வாழ்ந்துவரும் அம்மறைமாவட்டத்தினரை ஊக்கப்படுத்தியுள்ளார்.
இப்பணிகளை ஆற்றிவரும் அம்மறைமாவட்டத்தின் அருள்பணியாளர்கள் மற்றும் பல்வேறு மேய்ப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளோரின் மனத்தாராளத்தையும், தோழமையுணர்வையும் பாராட்டியுள்ளதோடு, தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |