2016-09-03 17:05:00

அன்னை தெரேசா, நற்செய்தி மகிழ்வின் மறைப்பணியாளர்


செப்.03,2016. அன்னை தெரேசா பற்றிய கருத்தரங்கில் உரையாற்றிய, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத் தலைவர் கர்தினால் ஃபெர்னான்டோ ஃபிலோனி அவர்கள், அன்னை தெரேசா, நற்செய்தி மகிழ்வின் மறைப்பணியாளர் என்று பாராட்டிப் பேசினார்.

அன்னை தெரேசா அவர்கள், புனிதராக அறிவிக்கப்படும் நிகழ்வையொட்டி நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் பேசிய கர்தினால் ஃபிலோனி அவர்கள், செபத்தையும் செயலையும், நற்செய்தி அறிவிப்பையும் மனித முன்னேற்றத்தையும், ஒருசேர ஆற்றிய உன்னத மறைப்பணியாளர் என்று புகழ்ந்தார்.

பிறரன்பின் மறைப்பணியாளரான அன்னை தெரேசா, செபத்தின் வழியாக, தன்னையே ஏழைகளுக்கு முழுவதுமாகத் தானமாக அளித்தார் என்றும், சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களிடம், கடவுளின் அன்பை அனுபவித்தார் என்றும் கூறினார் கர்தினால் ஃபிலோனி.

மேலும், இக்கருத்தரங்கில் உரையாற்றிய மும்பை கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், அன்னை தெரேசாவின் வாழ்வு, அன்பு மற்றும் செபத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்று தெரிவித்தார்.

அன்னை தெரேசா அவர்கள் முதலில் சேர்ந்த லொரேத்தோ சபையைவிட்டு விலகி, ஏழைகளுக்குகென தன்னை அர்ப்பணிக்க எடுத்த தீர்மானத்திற்கு, அவருக்கு மிகுந்த துணிச்சல் தேவைப்பட்டது என்றுரைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், தான் அருள்பணியாளராக இருந்தபோது, அன்னையவர்களைச் சந்தித்த பல அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.