2016-09-03 17:13:00

இரக்கத்தின் மறுஉருவமாக அன்னை தெரேசா


செப்.03,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டை அறிவித்ததற்கும், அன்னை தெரேசா அவர்களை, இரக்கத்தின் மறுஉருவமாகத் தேர்ந்தெடுத்திருப்பதற்கும் கடவுளுக்கும், திருத்தந்தைக்கும் நன்றி தெரிவிக்கிறோம் என்று, அருள்சகோதரி பிரேமா அவர்கள் கூறினார்.

அன்னை தெரேசா அவர்களின் புனிதர்பட்ட நிகழ்வை முன்னிட்டு, பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய, பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபை தலைவர் அருள்சகோதரி பிரேமா அவர்கள், இப்புனிதர்பட்ட நிகழ்வு, நற்செய்தி மற்றும் கடவுளின் செய்தியைப் பரப்புவதற்கு ஒரு நல்ல வாயப்பு என்று கூறினார்.

ஒவ்வொரு மனிதரையும், குறிப்பாக, ஏழைகளையும், மிகவும் நம்பிக்கையிழந்து வாழ்பவர்களையும், இரக்கத்தின் அருள் சென்றடையும் என்று தங்கள் சபையினர் நம்புவதாகத் தெரிவித்தார் அருள்சகோதரி பிரேமா.

உலகில், துன்பங்கள், அவமானப்படுத்தல், ஒதுக்கப்படுதல் ஆகியவை இருக்கும்வரை, அன்னை தெரேசாவின் செய்தியும், பணியும், முழுவதும் பிரசன்னமாக இருக்கும் என்றும் கூறினார் அருள்சகோதரி பிரேமா.

அருள்சகோதரி பிரேமா அவர்கள் வெளியிட்டுள்ள விபரங்களின்படி, அச்சபையின் 5,161 அருள்சகோதரிகள், 139 நாடுகளில், 758 இல்லங்களை நடத்துகின்றனர். மேலும், அன்னை தெரேசா தொடங்கிய பிறரன்பு சகோதரர்கள் சபையில், 397 அருள்பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் 29 நாடுகளில் 69 இல்லங்களில் பணியாற்றுகின்றனர்.

63 வயது நிரம்பிய அருள்சகோதரி பிரேமா, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.