2016-09-03 16:52:00

வத்திக்கான் தோட்டத்தில் அப்பரெசிதா அன்னை மரியா திருவுருவம்


செப்.03,2016. வத்திக்கான் தோட்டத்தில், இச்சனிக்கிழமையன்று, புதிதாக  நிறுவப்பட்டுள்ள அப்பரெசிதா(Aparecida) அன்னை மரியா திருவுருவத்தை ஆசீர்வதித்து, செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரேசில் நாட்டையும், அந்நாட்டு மக்களையும், அப்பரெசிதா அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து செபித்த திருத்தந்தை, அந்நாட்டின் ஏழைகள், புறக்கணிக்கப்பட்டவர், கைவிடப்பட்ட வயதானவர், சாலையோரச் சிறார் ஆகியோருக்காகச் சிறப்பாக செபிக்குமாறு விண்ணப்பித்தார்.

பிரேசில் மக்களை, சமூக நீதியிலும், கிறிஸ்துவின் மீதுள்ள அன்பிலும் காப்பாற்றுமாறு, அன்னை மரியாவிடம் மேலும் செபித்தார், திருத்தந்தை.

2013ம் ஆண்டில், ரியோவில் நடைபெற்ற உலக இளையோர் நாளுக்குச் சென்றபோது, அப்பரெசிதா திருத்தலத்திற்குச் சென்றதையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, இவ்வாண்டில் அப்பரெசிதா செல்வது இயலாத காரியம் எனினும், இவ்வன்னை மரியா திருவுருவம், அருகிலே இருக்கின்றது என்றும் கூறினார்.

ஏழைத் தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அப்பரெசிதா அன்னை மரியா திருவுருவத்தை, வேலை, கல்விவசதி மற்றும் மனித மாண்பைத் தேடுவோர் என, அனைவரும் இன்று கண்டுபிடிப்பார்களாக என்றும் கூறினார் திருத்தந்தை.

அப்பரெசிதா பேராயர் கர்தினால் Raymundo Damasceno Assis, வத்திக்கான் நகர பாப்பிறை அமைப்பின் தலைவரும், வத்திக்கான் நகர நிர்வாகியுமான கர்தினால் Giuseppe Bertello ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.