2016-09-14 17:07:00

அசிசியில் திருத்தந்தையும், அமைதி நொபெல் விருது பெற்றவர்களும்


செப்.14,2016. செப்டம்பர் 20, வருகிற செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அசிசி நகரில் நடைபெறும் அமைதி வழிபாட்டில் கலந்துகொள்ளும்போது, உலக அமைதிக்கான நொபெல் விருது பெற்ற ஆறுபேர் அந்த வழிபாட்டில் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"அமைதிக்கான தாகம்: உரையாடலில் சமயங்களும், கலாச்சாரங்களும்" என்ற தலைப்பில், செப்டம்பர் 18, 19, 20 ஆகிய தேதிகளில் அசிசி நகரில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில், கலந்துகொள்ளும் பல்வேறு சமயத் தலைவர்களுடன், நொபெல் விருதுபெற்ற ஆறு பேர், இவ்வாண்டு கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாந்த் எஜிதியோ குழுமமும், அசிசி மறைமாவட்டமும், புனித பிரான்சிஸ் துறவு சபையும் இணைந்து நடத்தும் இந்தக் கூட்டத்தில், 1976ம் ஆண்டு அமைதி விருது பெற்ற Mairead Maguire, 1983ம் ஆண்டு அமைதி விருது பெற்ற Lech Walesa உட்பட, நொபெல் விருதுபெற்ற ஆறுபேர் கலந்துகொள்வர் என்றும், இறுதி நாளன்று திருத்தந்தையும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.