2016-09-15 16:54:00

மரணதண்டனையை மீண்டும் கொணர்வதை எதிர்த்து ஆயர்கள்


செப்.15,2016. பிலிப்பீன்ஸ் நாட்டில் மரண தண்டனையை மீண்டும் கொணர்வதற்கு அந்நாட்டின் பாராளு மன்றம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, பிலிப்பீன்ஸ் ஆயர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சட்டங்களில் திருத்தங்களைக் கொணர்வதற்கு அதிகாரம் பெற்றுள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும், குறிப்பாக, கிறிஸ்தவத் தலைவர்களையும், இந்த மாற்றத்திற்கு ஆதரவு வழங்காமல் இருக்குமாறு ஆயர்கள் இப்புதனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்.

மனித உயிருக்கு அடிப்படையில் இருக்கும் மாண்பையும், நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் வகுத்துள்ள திட்டங்களையும் நிர்மூலமாக்கும் ஒரு வழியாக, மரண தண்டனை இருக்கிறது என்று, ஆயர்கள் தங்கள் விண்ணப்பத்தில் கூறியுள்ளனர்.

அனைத்து மனிதர்களும், அவர்கள் குற்றம் புரிந்தவரே ஆனாலும், வாழ்வதற்கு உரிமை பெற்றவர்கள்; அந்த வாழ்வைப் பறிக்கும் உரிமை எந்த மனித அமைப்பிற்கும் கிடையாது என்று ஆயர்களின் அறிக்கை வலியுறுத்துகிறது.

பிலிப்பீன்ஸ் நாட்டில், 2006ம் ஆண்டு, மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்று UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.