செப்.23,2016. அருளாளர், புனிதர் ஆகியோரை அறிவிப்பதற்கு, ஆய்வுகளையும், வழிமுறைகளையும் உருவாக்கும் புனிதர்பட்ட படிநிலைகள் பேராயம், ஒருவரைப் புனிதராக்குவதற்குத் தேவைப்படும் புதுமைகளை உறுதி செய்யும் முறைகளில் மாற்றங்களைக் கொணர்ந்துள்ளது.
ஒருவரைப் புனிதர் என அறிவிக்க பதிவு செய்யப்படும் புதுமைகளில் தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகள் குறித்து, 20 மாற்றங்களை அறிமுகப்படுத்தும் ஓர் அறிக்கையை, இப்பேராயம் இவ்வியாழன்று வெளியிட்டுள்ளது.
அருளாளர், அல்லது, புனிதராக ஒருவர் உயர்த்தப்படுவதற்குத் தேவையான புதுமைகள், பேராயத்தினால் நியமிக்கப்பட்ட மருத்துவர்களால் உறுதி செய்யப்படுவது வழக்கம் என்றாலும், தேவையுள்ளபோது, இப்புதுமைகளை ஆய்வு செய்ய, வெளியிலிருந்து நிபுணர்களை அழைக்கலாம் என்ற மாற்றம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
குணமாக்கும் புதுமைகளைத் தவிர, ஆபத்திலிருந்து காக்கப்படுதல், அற்புதமாகப் பலுகுதல் போன்று பதிவுசெய்யப்படும் புதுமைகளின் உண்மையை ஆய்வு செய்ய, அத்துறைகளுடன் தொடர்புடைய தொழில்நுட்ப நிபுணர்களின் கருத்துக்கள் கலந்தாலோசிக்கப்படும் என்ற மாற்றமும் கொணரப்பட்டுள்ளது.
பேராயத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் குழுவில் இணைவோர், ஐந்தாண்டுகள் பணியாற்றுவர் என்றும், தேவைப்பட்டால் அவர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
20 மாற்றங்களை உள்ளடக்கிய இந்த அறிக்கை, 2016ம் ஆண்டு, ஆகஸ்ட் 24ம் தேதி, திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு, செப்டம்பர் 23, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |