2016-09-30 16:37:00

இது இரக்கத்தின் காலம் : அன்பான சொற்களின் அற்புதம்


அந்தக் கல்யாண மண்டபத்தில் விதவிதமான உணவுப் பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. எந்த உணவை சுவைக்கலாம் என சிந்தித்துக்கொண்டிருந்த நேரத்தில், சமையல்காரர் வந்துவிடவே தப்பித்தோம், பிழைத்தோம் என மண்டபத்தை விட்டு வெளியே ஓடி வந்தது ஓர் எலி. அப்போது, அங்கே, மதில்மீது அமர்ந்திருந்த காகம் ஒன்று, அந்த எலியைக் கண்ட மகிழ்ச்சியில், அதனை விரட்டிப் பிடிக்க முயன்றது. உடனே, கீச்... கீச்... என்று அலறியபடி, பரிதாபமாகக் காகத்தைப் பார்த்தது அந்த எலி. "காகம் அண்ணா! நீங்கள் செய்வது சரிதானா? மண்டபத்தில் உள்ளே வந்த மனிதருக்குப் பயந்து தெருவில் ஓடிவந்தேன். இங்கே தெருவில் நீங்கள் என்னைப் பிடித்துக் கொல்ல நினைக்கிறீர்களே... என் மீது கொஞ்சமாவது கருணை காட்ட மாட்டீர்களா?'' என்று அன்போடு கேட்டது. அதனைக் கேட்ட காகம், "எலியே! எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. என் பசிக்கு இப்போது உணவு தேவைப்படுகிறது. அதனால் உன்னை இரையாகக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். அதனால், அடம்பிடிக்காமல் எனக்கு இரையாகிவிடு!'' என்று கண்டிப்புடன் கூறியது. "காகம் அண்ணா! உங்கள் பேச்சிலும் ஒருவித நியாயம் இருப்பதாக உணர்கிறேன். ஆனால், உங்கள் குஞ்சுக்கு இதைப்போல் ஓர் ஆபத்து நேர்ந்து அது வேறு ஏதாவது பறவைகளிடமோ, விலங்குகளிடமோ சிக்கிக்கொண்டால் அது என்ன பாடுபடும். உங்கள் குஞ்சு போன்று என்னை நினைத்து எனக்கு உயிர்ப்பிச்சை கொடுங்களேன்!'' என்று பரிவோடு கெஞ்சியது எலி. எலியின் சாமர்த்தியமான பேச்சினால் காகத்தின் மனது இளகிவிட்டது. சிறிது நேரம் யோசனை செய்த காகம், எலியைப் பார்த்து, "எலியே! உன்னைப் பார்த்தபோது எப்படியாவது உன்னை சாப்பிட்டுவிட வேண்டும் என்ற எண்ணம்தான் தோன்றியது. ஆனால், உன் அன்பான வார்த்தைகளைக் கேட்கிறபோது அந்த எண்ணம் என் மனதைவிட்டு அகன்றுவிட்டது. இனிமேல் நீ பயமில்லாமல் செல்லலாம்!'' என்று கூறியபடி, வேறு இரையைத் தேடிப் பறந்து சென்றது. ஆம். அன்பான பேச்சு, எதிரியின் மனதைக்கூட மாற்றிவிடும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.