2016-10-04 16:54:00

புனித அன்னை தெரேசாவின் சொற்கள் இந்தியருக்குத் தூண்டுகோல்


அக்.04,2016.  அன்னை தெரேசா அவர்கள், புனிதராக உயர்த்தப்பட்டுள்ளதை முன்னிட்டு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய, இந்திய துணை அரசுத்தலைவர் ஹமீது அன்சாரி அவர்கள், உலகத் தலைவர்கள், புனித தெரேசா அவர்களை, ஒரு தூண்டுதலாக நோக்கினர், ஆனால், அன்னையோ, தன்னை, ஏழைகளில் ஒருவராகப் பார்த்தார் என்று கூறினார்.

அன்னை தெரேசா அவர்கள், தனக்கு எதிராக எழுந்த விமர்சனங்களை, அர்த்தமுள்ள பழமொழிகள் அல்லது கடிந்துரைக்கும் சொற்களைக் கொண்டு எதிர்கொள்ளாமல், அவர் தனது இரக்கப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றியதன் வழியாக, அவற்றுக்குப் பதிலளித்தார் என்றும் கூறினார் துணை அரசுத்தலைவர் அன்சாரி.

அன்னை தெரேசா அவர்களின் வார்த்தைகள், இன்று, உலகெங்கும் எண்ணற்ற மக்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தியாக உள்ளன என்றும், மகாத்மா காந்தி அவர்களின் செய்தி போன்று, அன்னை தெரேசா அவர்களின் செய்தியும், நமக்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளது என்றும், அன்சாரி அவர்கள் கூறினார்.

ஆதாரம் : IANS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.