2016-10-13 16:22:00

பாத்திமா நகர் காட்சிகளின் 99வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்


அக்.13,2016. அன்னை மரியா பாத்திமா நகரில் அளித்த காட்சிகளின் 99வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அனைத்து விசுவாசிகளுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்த்துக்களைக் கூற தான் வந்துள்ளதாக, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

1917ம் ஆண்டு மேமாதம் 13ம் தேதி முதல், அக்டோபர் 13ம் தேதி முடிய, லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ்க்கோ என்ற மூன்று இளையோருக்கு, அன்னை மரியா ஆறுமுறை காட்சிகள் கொடுத்த நிகழ்வின் 99வது ஆண்டு நிறைவை பாத்திமா திருத்தலம் கொண்டாடியது.

இக்கொண்டாடங்களைச் சிறப்பிக்கும் வகையில், திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள் பாத்திமா நகரில் மேற்கொண்டுள்ள மேய்ப்புப்பணி பயணத்தில், இப்புதன் மாலை, மெழுகு திரிகள் ஏந்திய ஊர்வலத்தையும், நற்கருணை பவனியையும் நிறைவேற்றி, திருப்பலியாற்றினார்.

இத்திருப்பலியில் வழங்கிய மறையுரையில், அன்னை மரியாவைப் போல நாம் ஒவ்வொருவரும் அர்ப்பண வாழ்வை மேற்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

தகவல் பரிமாற்றத்தில் அதிக அளவில் வளர்ந்துள்ள இன்றைய உலகில் ஒருவரைப் பற்றி அதிகம் அறிந்துகொள்வதே, அவருக்கு அர்ப்பணமாகும் உணர்வைத் தருகிறது என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், இறைவனைக் குறித்து தகவல்களை அறிந்துகொள்வதால் அவருக்கு நாம் அர்ப்பணமாகிவிட முடியாது, மாறாக, அவரை உள்ளத்தால் உணர்ந்து, தனிப்பட்ட பற்றை வளர்த்துக்கொள்வதால் மட்டுமே இந்த அர்ப்பணம் சாத்தியமாகும் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.