2016-10-28 15:23:00

இந்திய ஆயர்களின் தீபாவளி வாழ்த்து


அக்.28,2016. நம் வானங்கள் பட்டாசு ஒளியாலும், நம் வீடுகள் சுடர்விடும் அழகான விளக்குகளாலும் ஒளிரும் இவ்வேளையில், நம் இதயங்கள், நன்மைத்தனத்தின் ஒளியால் நிரம்பட்டும் என்று, தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர் இந்திய கத்தோலிக்க ஆயர்கள்.

அக்டோபர் 30, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் தீபாவளியை முன்னிட்டு, உலகெங்கும் வாழ்கின்ற இந்து மதத்தவர்க்குத் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள ஆயர்கள், ஊழல், வன்முறை மற்றும் பிரிவினைவாதச் சக்திகளிலிருந்து நம் நாடு விடுதலையடைவதாக என்றும் கூறியுள்ளனர்.

அக்டோபர் 27, இவ்வியாழனன்று, இந்திய ஆயர் பேரவை வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், இந்தியாவிலும், உலகெங்கிலும், அமைதி, முன்னேற்றம் மற்றும் வளமையை, இத்திருவிழா கொண்டு வரட்டும் என்று, தாங்கள் செபிப்பதாகவும் கூறியுள்ளனர்.

இன்னல்கள் மற்றும் சவால்களின் மத்தியிலும்கூட, உண்மை, ஒளி மற்றும் வாழ்வுக்காக, நாம் உழைப்பதற்கு, தீபங்களின் இவ்விழா, நம் அனைவரின் இதயங்களையும் தூண்டுவதாக எனவும், இந்திய ஆயர்களின் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.