2016-11-02 15:42:00

மீட்கப்பட்ட நகரங்களைப் பார்வையிட்ட முதுபெரும் தந்தை சாக்கோ


நவ.02,2016. ஈராக் நாட்டின் நினிவே சமவெளியில் உள்ள சில நகரங்கள் மீட்கப்பட்டுள்ளதை அடுத்து, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, முதலாம் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்களும், துணை ஆயர் பசிலியோ சலீம் யாதோ அவர்களும் அந்நகரங்களை பார்வையிட்டனர்.

இராணுவத்தின் முயற்சியால் மீட்கப்பட்ட Bartella, Karmles, Qaraqosh, Teskof, Baqofa, Btnaya ஆகிய ஊர்களை பார்வையிட்ட முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள்,  ஈராக் நகரின் மோசூல் நகரை, இஸ்லாமியத் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசுப்படையினரைப் பாராட்டினார்.

மீட்கப்பட்ட நகரங்களில் இருந்த அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் தீவிரவாதிகளால் பெரும் சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதைக் கண்ட முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், அழிவுகளுக்கு உள்ளான அவ்வாலயங்களில் அமைதிவேண்டி செபித்தார் என்று பீதேஸ் (Fides) செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

நினிவே சமவெளிப் பகுதி, 'தங்கள் புனித பூமி' என்று கூறிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், மீட்கப்பட்ட நகரங்களுக்கு கிறிஸ்தவர்கள் மீண்டும் குடியேறி வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.