2016-11-03 16:21:00

அல்பேனியாவில் அருளாளர்களாக உயர்த்தப்படும் 38 மறைசாட்சிகள்


நவ.03,2016. அல்பேனியா நாட்டின் கம்யூனிச அடக்குமுறைகள் காரணமாக, ஆயர்கள், அருள் பணியாளர்கள், துறவியர், பொது நிலையினர் ஆகியோர் கொல்லப்பட்ட வேளையில், அவர்கள் அனைவரும், "கிறிஸ்து அரசர் வாழ்க, அல்பேனியா வாழ்க, எங்களைக் கொலை செய்வோரை நாங்கள் மன்னிக்கிறோம்" என்று சொல்லியபடியே இறந்தனர் என்று, அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

நவம்பர் 5, வருகிற சனிக்கிழமை, அல்பேனியா நாட்டில் கொல்லப்பட்ட 38 மறைசாட்சிகள், Shkodër பேராலயத்தில், அருளாளர்களாக உயர்த்தப்படுவதைக் குறித்து, Aid to the Church in Need பிறரன்பு அமைப்பிற்கு பேட்டியளித்த Shkodër பேராயர், Angelo Massafra அவர்கள், இவ்வாறு கூறினார்.

1945ம் ஆண்டு முதல், அல்பேனியா நாட்டில் உருவான கம்யூனிசப் புரட்சியில், அனைத்து வழிபாட்டுத் தலங்களும், அங்காடிகளாகவும், விளையாட்டு அரங்கங்களாகவும் மாற்றப்பட்டன. 1946ம் ஆண்டு முதல் 1973ம் ஆண்டு முடிய அங்கு கொல்லப்பட்ட 38 மறை சாட்சிகளை அருளாளர்களாக உயர்த்தும் ஆணையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கினார்.

இச்சனிக்கிழமை, அருளாளர்களாக உயர்த்தப்படும் 38 மறைசாட்சிகளில், Giovanni Fausti, Daniel Dajani, மற்றும் Gjon Pantalija ஆகிய மூவரும், இயேசு சபை அருள் பணியாளர்கள்.

அல்பேனியாவின் 70 விழுக்காடு மக்கள்தொகையைக் கொண்டுள்ள இஸ்லாமியர் பலரும், இந்த வமுறைகளுக்குப் பலியாயினர் என்று ZENIT கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

இந்த வன்முறைகளில் தப்பித்த அருள்பணியாளர் Ernest Simoni அவர்கள் வழங்கிய சாட்சியம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது என்பதும், அருள்பணியாளர் Simoni அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் கர்தினாலாக உயர்த்தியுள்ளார் என்பதும், குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.