2016-11-04 14:51:00

லெபனானில் நிலையான அரசு அமையும், ஆயர்கள் நம்பிக்கை


நவ.04,2016. லெபனானில், இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர், இடம்பெற்றுள்ள அரசுத்தலைவர் தேர்தலை வரவேற்றுள்ள அதேவேளை, அந்நாட்டில் நிலையான அரசு அமைக்கப்படும் என்ற, தங்களின் நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர், அந்நாட்டு மாரனைட் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்கள்.

லெபனானில், இரண்டரை ஆண்டுகளாகக் காலியாக இருந்த அரசுத்தலைவர் பணியிடத்திற்கு, புதிய அரசுத்தலைவராக, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Michel Aoun அவர்களுக்குத் தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர் ஆயர்கள்.

பொருளாதார நெருக்கடி, உள்நாட்டுப் பயங்கரவாதம், நிர்வாகத் தேக்கநிலை, எல்லைகளில் போர்கள், புலம்பெயர்ந்தவர்களை வரவேற்றல், கேதார் நிலப் பகுதிகளில் முதலீடு செய்தல் போன்ற, தற்போது, லெபனான் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கு, புதிய அரசுத்தலைவர், திறமையான அரசை அமைக்க வேண்டுமென்றும், ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வரலாற்றில், மிகவும் நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும் லெபனான் மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில், ஒன்றிப்பு ஏற்பட வேண்டுமென்றும், ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

லெபனானில், அரசுத்தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு தருமாறு, ஆயர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.