2016-11-09 16:47:00

125வது ஆண்டைக் கொண்டாடும் சாம்பியாவில் கர்தினால் பிலோனி


நவ.09,2016. சாம்பியா தலத்திருஅவை 125வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், திருத்தந்தையின் சார்பாக இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதை ஒரு வரமாக கருதுகிறேன் என்று, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள் கூறினார்.

நவம்பர் 9, இப்புதனன்று, சாம்பியாவின் லுசாகாவில் ஆரம்பமான தேசிய கத்தோலிக்க மாநாட்டின் துவக்க விழாவில் உரையாற்றிய கர்தினால் பிலோனி அவர்கள், மறைபரப்புப் பணியாளர்களின் கடின உழைப்பால், சாம்பியா நாடு, பெருமளவில் அனுபவித்து வரும் ஆன்மீக அறுவடையைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள் கூறிய வார்த்தைகளை, தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

மலேரியா போன்ற நோய்களால் துன்புற்றாலும், இயேசு சபை துறவியர், மற்றும், ஏனைய ஐரோப்பிய அருள்பணியாளர்கள், 1891ம் ஆண்டு சாம்பியா நாட்டில் நிறுவிய பணித்தளங்கள் வழியே, அந்நாட்டில் கிறிஸ்தவம் வேரூன்றியது என்று, கர்தினால் பிலோனி அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

கிறிஸ்தவ விழுமியங்களையும், இம்மண்ணுக்கே உரிய கலாச்சார விழுமியங்களையும் இணைத்துப் பின்பற்றுவது, சாம்பியா நாட்டு கிறிஸ்தவர்களுக்கு முன் உள்ள சக்திவாய்ந்த சவால் என்பதையும் கர்தினால் பிலோனி அவர்கள், தன் உரையில்  எடுத்துரைத்தார்.

சாம்பியா நாடு சந்தித்துவரும் வறட்சி, வறுமை, வேலைவாய்ப்பின்மை ஆகிய சவால்களையும், HIV/AIDS மற்றும் மலேரியா நோய்களையும் எதிர்கொள்வது தலத்திருஅவையின் தலையாயக் கடமை என்பதையும், கர்தினால் பிலோனி அவர்கள், தன் உரையில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.