2016-11-23 13:58:00

இது இரக்கத்தின் காலம்– புத்திக் கூர்மையும் அமைதியுமே ஆயுதம்


ஒரு குருவும் அவருடைய சீடர்களும் ஆற்றங்கரையோரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர். ஒரு சீடர், குருவை நோக்கி, ‘குருவே, இளவயதில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும், பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள், உண்மைதானா?’ என்று கேட்டார்.

‘உண்மைதான்.. ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன்…!’ என்றார் குரு.

‘ஏன் குருவே? போர் தவறா, ஆயுதங்களே வேண்டாமா?’ என, சீடர்கள் கேட்டனர்.

‘சரி தவறு என்பதல்ல என் வாதம், ஒரு கட்டத்துக்குமேல் புத்திக் கூர்மையையும் அமைதியையும்விட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்று புரிந்துவிட்டது எனக்கு!” என்ற குருவின் வார்த்தைகளில் சீடர்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அவரை சோதித்துப் பார்த்துவிட முடிவு செய்து, ஒரு திட்டம் போட்டனர் இரு சீடர்கள்.

‘நாளை குரு தியானத்தில் இருக்கும்போது, நாம் இருவரும் மறைந்திருந்து அவரைத் தாக்குவோம். அப்போது அவர் ஆயுதங்களை எடுக்காமல் நம்மை எப்படிச் சமாளிக்கிறார் என்று பார்ப்போம்,’ என்று முடிவு செய்தனர்.

மறுநாள் வகுப்புகள் முடிந்ததும், குரு வழக்கம்போல தியானத்தில் ஆழ்ந்துவிட, இந்த இரு சீடர்கள் மட்டும், ஓலைத் தட்டிகளுக்குப் பின்னால் மறைந்து கொண்டனர்.

சில நிமிடங்கள் கழித்து, இருவரும் மெல்ல வெளியில் வந்தனர். பேசி வைத்தபடி இருவரும் குருவின் மீது ஒரே நேரத்தில் இரு பக்கமிருந்தும் பாய்ந்தனர்.

குரு முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. அவர்கள் பக்கத்தில் நெருங்கும்வரை கண்மூடி அமைதியாக இருந்த குரு, கடைசி விநாடியில் சற்று முன்னே வந்து குனிந்துகொண்டார். சீடர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு தரையில் விழுந்து உருண்டனர்.

பின்னர் எதுவும் நடக்காததுபோல் தியானத்தைத் தொடர்ந்தார் குரு!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.