2016-12-15 16:04:00

கர்தினால் Arns மறைவுக்கு திருத்தந்தையின் இரங்கல் தந்தி


டிச.15,2016. பிரேசில் நாட்டின் São Paulo உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயரான கர்தினால், Paulo Evaristo Arns அவர்கள், இறையடி சேர்ந்ததையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார்.

São Paulo உயர் மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Odilo Pedro Scherer அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள தந்தியில், கர்தினால் Arns அவர்கள், நற்செய்தியின் சான்றாக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

தன் 95 ஆண்டுகள் உலக வாழ்வில், அவர், 71 ஆண்டுகள் அருள் பணியாளராகவும், 43 ஆண்டுகள் கர்தினாலாகவும் பணியாற்றியுள்ளார்.

95 வயது நிறைந்த கர்தினால் Arns அவர்கள், திருத்தந்தை, அருளாளர் 6ம் பவுல் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டவர்களில் இறுதியானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1973ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்ட Arns அவர்கள், São Paulo உயர் மறைமாவட்டத்தின் பேராயராக 28 ஆண்டுகள் பணியாற்றியவர்.

கர்தினால் Arns அவர்களின் மறைவையடுத்து, உலகில் உள்ள கர்தினால்களின் எண்ணிக்கை 227 என்பதும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்தெடுக்கும் தகுதி உடையவர்கள் 120 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.