2016-12-21 15:03:00

புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவைக்கு நன்றி


டிச.21,2016. டிசம்பர் 20, இச்செவ்வாயன்று, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் அலுவலகத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்று, அங்குள்ளோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

நிறைவடைந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு முழுவதும் அயராது உழைத்து, யூபிலி ஆண்டின் அனைத்து நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்த இத்திருப்பீட அவையின் பணிகளைப் பாராட்டி, அந்த அவையில் பணியாற்றும் அனைவருக்கும் தன் நன்றியை நேரில் தெரிவிக்க தான் வந்திருப்பதாக திருத்தந்தை கூறினார்.

மேலும், இத்திருப்பீட அவையில் பணியாற்றும் அனைவருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் திருதந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும், வத்திக்கான் நிதித் துறையில் பணியாற்றி, அங்கு தனிச்சுற்றுக்கென ஒதுக்கப்பட்டிருந்த சில முக்கிய ஆவணங்களை, ஓர் இத்தாலிய நாளிதழுக்கு அளித்ததால், வத்திக்கானில் காவலில் வைக்கப்பட்டிருந்த அருள்பணியாளர் Vallejo Balda அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மன்னிப்பு வழங்கியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு, நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட அருள்பணியாளர் Vallejo Balda அவர்கள், தன் தண்டனையின் பாதிப்பகுதியை முடிந்துவிட்டதால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் இனி தொடர்ந்து வத்திக்கானில் பணியாற்ற முடியாத நிலையில், அவரது மறைமாவட்டமான ஸ்பெயின் நாட்டின் Astorgaவின் ஆயர் Juan Antonio Menéndez Fernández அவர்கள் அவரது எதிர்காலம் குறித்து தீர்மானிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.