2016-12-27 15:15:00

கடத்தப்பட்ட அருள்பணியாளர் டாம் உதவிக்கு விண்ணப்பம்


டிச.27,2016. ஏமனில், கடந்த மார்ச் 4ம் தேதி, ஐ.எஸ். இஸ்லாமிய அரசால் கடத்தப்பட்ட, இந்திய சலேசிய சபை அருள்பணியாளர் டாம் உழுன்னலில் (Tom Uzhunnalil) அவர்கள், தனது விடுதலைக்காக, திருத்தந்தை பிரான்சிஸ், இந்திய அரசு மற்றும், உலகளாவிய கத்தோலிக்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

பல மாதங்களாக எந்தச் செய்தியும் வெளிவராத நிலையில், கடத்தல்காரர்கள், இத்திங்களன்று, வலைத்தளத்தில், வெளியிட்டுள்ள ஒரு காணொளியில், அருள்பணியாளர் உழுன்னலில் அவர்கள், தான் விடுலை செய்யப்பட உதவுமாறு  விண்ணப்பித்துள்ளார்.

தனக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுவதால், உடனடியாக உதவுங்கள் எனவும், அந்தக் காணொளியில், அருள்பணி உழுன்னலில் அவர்கள், கூறியுள்ளார்.

நான் கடத்தப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன, என்னைக் கடத்தியவர்கள், எனது விடுதலைக்காக, இந்திய அரசோடு பலமுறை தொடர்பு கொண்டனர், ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை என்பது எனக்கு வருத்தம் அளிக்கின்றது எனவும், அச்செய்தியில், அருள்பணி உழுன்னலில் அவர்கள், கூறியுள்ளார்.

இதற்கிடையே, அருள்பணி உழுன்னலில் அவர்களின் விடுதலைக்காக, உள்ளூர் மற்றும் அப்பகுதி அதிகாரிகளுடன், இந்திய மத்திய அரசு, தொடர்ந்து தொடர்புகொண்டு வருவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும், கடந்த ஏப்ரல் 10ம் தேதி, மூவேளை செப உரைக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணி உழுன்னலில் அவர்களின் விடுதலைக்காக விண்ணப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏடனில், பிறரன்பு மறைப்பணியாளர் சகோதரிகள் சபை நடத்திய முதியோர் இல்லத்தை, ஆயுதம் தாங்கியவர்கள் நடத்திய தாக்குதலின்போது, அருள்பணி உழுன்னலில் அவர்கள் கடத்தப்பட்டார்.

ஆதாரம் : Agencies /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.