2017-01-03 15:23:00

தமிழகத்தில் கொசுக்களை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை அவசியம்


சன.03,2017. தமிழகம் முழுவதும் கொசு உற்பத்தியைத் தடுக்கவும், கொசுக்களை ஒழிக்கவும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழ்நாடு பொதுநல வழக்கு மையத்தின் மேலாண்மை அறங்காவலர் கே.கே.ரமேஷ் அவர்கள், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொசுவால் பரவும் நோய்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன எனவும், கொசுவால் பரவும் நோய்களில், முக்கியமான ஒன்றாகிய, டெங்கு காய்ச்சலைத் தடுக்க, இதுவரை மருந்து, மாத்திரைகள் இல்லை எனவும், கொசு, கடிக்காமல் பார்த்துக் கொண்டால் மட்டுமே டெங்கு உள்ளிட்ட கொசுவால் பரவும் நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும், அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார் கே.கே.ரமேஷ்.

கொசு உற்பத்தியை பொருத்தவரை, கட்டுப்படுத்த முடியாத அளவில் பெருகியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு, சிக்கன்குனியா மற்றும், மர்ம காய்ச்சலுக்கு, நூற்றுக்கும் மேற்பட்ட வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள் இறந்தனர் எனவும், கே.கே.ரமேஷ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.