2017-01-10 16:38:00

மனித சமுதாயத்திற்குப் பணியாற்றும் கிறிஸ்தவர்களுக்காக...


சன.10,2017. மனித சமுதாயம் எதிர்நோக்கும் சவால்களுக்குப் பணியாற்றும் கிறிஸ்தவர்களுக்காக, இந்தச் சனவரி மாதத்தில், சிறப்பாகச் செபிக்குமாறு, உலகினரைக்  கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித சமுதாயம் எதிர்நோக்கும் சவால்களுக்குப் பணியாற்றுவதன் வழியாக, கிறிஸ்தவ சபைகளுக்குள், முழு ஒன்றிப்பு ஏற்படும் என்று, சனவரி மாதச் செபக் கருத்து பற்றிய காணொளிச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.

இன்றைய உலகில், பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஒன்றாக இணைந்து, உதவி தேவைப்படும் மனித சமுதாயத்திற்குப் பணியாற்றுகின்றனர் என்றும்,  மனித வாழ்வு, மனித மாண்பு, படைப்பு ஆகியவை மதிக்கப்படவும், அநீதிகளை எதிர்த்தும், செயல்பட்டு வருகின்றனர் என்றும், திருத்தந்தை தனது காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

நலிந்தவர்கள் மற்றும், துன்புறும் மக்களோடு ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு, அவர்களுக்கு ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு ஏற்பட்டுள்ள ஆவல், நம் எல்லாருக்கும் மகிழ்வின் ஊற்றாக உள்ளது என்றும், சனவரி மாதச் செபக் கருத்து பற்றிய காணொளிச் செய்தியில் பேசியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வோர் ஆண்டும், சனவரி 18 முதல் 25 வரை கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.