2017-01-12 16:03:00

முதுபெரும் தந்தை சாக்கோவைப் பாராட்டிய ஈராக் கம்யூனிச கட்சி


சன.12,2017. கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை முதலாம் இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள், ஈராக் நாட்டில், ஒப்புரவை உருவாக்க மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளுக்கும், அந்நாட்டு கம்யூனிச கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர் என்று, பீதேஸ் (Fides) செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

கம்யூனிசக் கட்சியின் பிரதிநிதிகள், அண்மையில் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்களைச் சந்தித்து, கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறியபோது, அனைத்துத் தரப்பினரும் ஈராக் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்காற்றமுடியும் என்று முதுபெரும் தந்தை கூறி வரும் கருத்துக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

1934ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஈராக் கம்யூனிச கட்சி, 1970கள் வரை அரசியலில் முழுமையாக ஈடுபட்டு வந்தது என்றும், சதாம் உசேன் காலத்தில் இக்கட்சி அதிக அடக்கு முறைக்கு உள்ளானது என்றும் பீதேஸ் செய்தி மேலும் கூறுகிறது.

கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினர் சார்பாக, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதும், இஸ்லாமிய அரசு என்ற அடிப்படைவாதக் குழுவின் கட்டுப்பாட்டிலிருந்து மோசூல் நகரை மீட்பதில் அவர் காட்டி வரும் ஆர்வமும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.