2017-01-20 14:58:00

திருத்தந்தை, பரகுவாய் அரசுத்தலைவர் சந்திப்பு


சன.20,2017. பரகுவாய் நாட்டு அரசுத்தலைவர் Horacio Manuel Cates Jara அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளிக்கிழமை காலையில் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகெர் ஆகிய இருவரையும் சந்தித்து உரையாடினார், பரகுவாய் அரசுத்தலைவர் Cates.

திருப்பீடத்திற்கும், பரகுவாய்  நாட்டிற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, சமூக அமைதி, பரகுவாய் நாட்டில் கத்தோலிக்கத் திருஅவையின் பணிகள், குறிப்பாக, தேவையில் இருப்போருக்கு உதவி, உருவாக்குதல் போன்ற தலைப்புகள், இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

மேலும், பரகுவாய்ப் பகுதியின் அரசியல், சமூகச் சூழல், குறிப்பாக, சனநாயகத்தை அமைப்பதில் காணப்படும் முன்னேற்றம் ஆகியவை பற்றியும், இத்தலைவர்கள் கலந்துரையாடினர் என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் மேலும் கூறியது.

தென் மெரிக்க நாடான பரகுவாய்க்கு, 2015ம் ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது, திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றிய பீடத்தை, கலைவடிவில் வடித்த ஒரு நினைவுச் சின்னத்தையும்,  அத்திருத்தூதுப் பயணத்தின் புகைப்படங்கள் கொண்ட ஒரு நூலையும், திருத்தந்தைக்கு அளித்தார் பரகுவாய் அரசுத்தலைவர் Cartes.

திருத்தந்தையும், இரக்கத்தின் யூபிலி பதக்கத்தையும், அவரின் பல்வேறு எழுத்துப் பிரதிகளையும், பரகுவாய் அரசுத்தலைவருக்கு வழங்கினார்.

மேலும், அத் லிமினா சந்திப்பை முன்னிட்டு, அயர்லாந்து ஆயர்களை, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.