2017-01-21 15:58:00

ஒடிசா மறைசாட்சிகள் விரைவில் புனிதர்கள்


சன.21,2017. ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டில், கிறிஸ்தவர்க்கெதிராய் நடந்த வன்முறையில் கொல்லப்பட்ட நூறு கிறிஸ்தவ மறைசாட்சிகளை புனிதர்களாக அறிவிப்பதற்குரிய நடைமுறைகளைத் தொடங்குவதற்கு, திருப்பீடம் இசைவு தெரிவித்திருப்பதாக, கர்தினால் ஆசுவால்ட் கிரேசியஸ் அவர்கள் அறிவித்தார்.

இது குறித்து, நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni அவர்களிடம், தான் பேசியது பற்றி ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்ட கர்தினால் கிரேசியஸ் அவர்கள், கிறிஸ்துவை மறுதலிப்பதற்குப் பதிலாக, இத்தனை பேர் தங்களின் உயிரைத் தியாகம் செய்திருப்பது, பெரும் மகிழ்வைத் தருகின்றது என்று கூறினார்.

மேலும், ஒடிசாவில் சிந்தப்பட்ட இரத்தம், எல்லாக் கிறிஸ்தவ சபையினரது இரத்தம் என்பதால், அம்மாநிலத்தில், கிறிஸ்தவ ஒன்றிப்பு, கிறிஸ்தவர்கள் மத்தியில், எதார்த்தமான வாழ்வாக உள்ளது என்று, கட்டக் புவனேஷ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள் தெரிவித்தார்.

உலகக் கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்துவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம் பற்றிப் பேசிய பேராயர் பார்வா அவர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்ற கொடுமையான வன்முறை, கிறிஸ்தவர்களை ஒன்றிணைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.