2017-01-28 15:26:00

இறையாட்சி மலர்வதை தூய்மையான கண்களால் பார்க்க முடியும்


சன.28,2017. “இறையாட்சி, மறைந்திருக்கும் விதை போன்று, ஏற்கனவே நம் மத்தியில் உள்ளது, இது மலர்வதை, தூய்மையான கண்களால், எவரும் பார்க்க முடியும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று,  வெளியாயின.

மேலும், 2018ம் ஆண்டில், அயர்லாந்தில் நடைபெறவிருக்கும், உலக குடும்பங்கள் மாநாட்டையொட்டி, அந்நாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பது, மிகவும் முக்கியமான ஒரு பயணமாக அமையும் என, அயர்லாந்து நாட்டு திருப்பீடத் தூதர் கூறினார்.

திருத்தந்தையின் அயர்லாந்து திருத்தூதுப் பயணம் குறித்து, CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த, அயர்லாந்து தூதர், Emma Madigan அவர்கள், 2018ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் திருத்தூதுப் பயணம், ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்குப் பின், அயர்லாந்துக்கு, ஒரு திருத்தந்தை மேற்கொள்ளும் பயணமாக அமையும் எனத் தெரிவித்தார்.

2016ம் ஆண்டு நவம்பரில், அயர்லாந்து பிரதமர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து, திருத்தந்தையை, தனது நாட்டுக்கு வருகை தருமாறு, அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1979ம் ஆண்டில், அயர்லாந்திற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார்.

ஆதாரம் : CNA/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.