2017-01-30 16:47:00

இயேசுவிலான நம் புதிய வாழ்வின் ஆதாரங்களைத் தேடுவோம்


சன.,30,2017. அனைத்தையும் துறந்து, ஜப்பானில் நற்செய்தியை அறிவிக்க தங்களைக் கையளித்த துறவறத்தாரை இந்நேரத்தில் நினைவுகூர்வதாக, அந்நாட்டில் சனிக்கிழமையன்று நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் பேராயர் பால் காலகர்.

ஜப்பானில் பயணம் மேற்கொண்டுவரும், வெளிநாடுகளுக்கான திருப்பீட உறவுகள் துறையின் செயலர் பேராயர் காலகர் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, அந்நாட்டில் சிறப்பிக்கப்பட்ட துறவற அர்ப்பண நாளில் நிறைவேற்றிய திருப்பலியில் இவ்வாறு கூறினார்.

நம் விசுவாசத்தினால், இயேசுவில் துவங்கும் புதிய வாழ்வில், நம் கிறிஸ்தவ மற்றும் துறவு வாழ்வின் ஆதாரங்களைத் தேடுவோம் என, அத்திருப்பலியில் குழுமியிருந்த துறவறத்தாருக்கு அழைப்பு விடுத்த பேராயர் காலகர் அவர்கள், தன் மக்களின் மீட்பவராகவும், இரக்கம் நிறைந்த தலைமைக் குருவாகவும் கடவுளின் முன் நிற்கும் இயேசுவைக் குறித்து சிந்திப்போம், ஏனெனில் நம் அழைப்பு அவரிடமிருந்தே வந்தது என்றார்.

ஒவ்வொரு நாளும் நாம் விசுவாசத்தில் நம்மை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார், பேராயர் காலகர்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.