பிப்.01,2017. ஒடிஸ்ஸா மாநிலத்தின், தான்தோலிங்கி (Dantolingi) எனுமிடத்தில் அமைந்துள்ள, லூர்து நகர் அன்னை மரியாவின் திருத்தலம், ஒருமைப்பாட்டிற்கும், அமைதிக்கும் ஓர் அடையாளமாக இருப்பதாக என்று, அம்மாநில ஆளுநர், எஸ். சி. ஜமீர் அவர்கள், வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
1917ம் ஆண்டு, பிரெஞ்சு மறைப்பணியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்தத் திருத்தலம், இவ்வாண்டு தன் முதல் நூற்றாண்டினைக் கொண்டாடும் வேளையில், இம்மாதம் 11ம் தேதி நடைபெறவிருக்கும் விழாவிற்கு, ஆளுநர் தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்.
பெர்ஹாம்பூர் ஆயர் சந்திர நாயக் அவர்களுக்கு, ஆளுநர் ஜமீர் அவர்கள் அனுப்பிய செய்தியில், இறைவன் அனைவர் மீதும் அன்பு கொள்கிறார், அந்த அன்பை, தன் அன்னையின் வழியே அவர் காட்டுகிறார் என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
பிப்ரவரி 1, இப்புதன் முதல், 9ம் தேதி முடிய இத்திருத்தலத்தில் நவநாள் செபங்கள் இடம்பெறும் என்றும், பிப்ரவரி 11, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளன்று, கட்டக் புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள் தலைமையில், திருத்தலத்தின் நூற்றாண்டு விழா திருப்பலி நிறைவேற்றப்படும் என்றும் ஆசிய செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |