2017-02-14 15:49:00

மியான்மாரில் கத்தோலிக்கத் திருஅவையின் அமைதிக் கருத்தரங்கு


பிப்.14,2017. மியான்மாரின், கச்சின் மற்றும் ஷான் மாநிலங்களில் இடம்பெற்றுவரும் ஆயுத மோதல்கள் குறித்து கவலை தெரிவித்த அதேவேளை, நாட்டு மக்களுடன், குறிப்பாக, கச்சின், ஷான் மற்றும், ரக்கின் இன மக்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வையும், செபங்களையும் தெரிவித்துள்ளார், அந்நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ.

போருக்குத் திரும்பாமல், அமைதியின் திருப்பயணத்தை தொடர்வோம் எனவும் கர்தினால் போ அவர்கள், தனது அண்மை அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும், வருகிற ஏப்ரலில், யாங்கூனில், மியான்மாரின் கத்தோலிக்கத் திருஅவை நடத்தவிருக்கும் அமைதிக் கருத்தரங்கில், போரிடும் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்கத் திருஅவையின் இந்த அமைதிக் கருத்தரங்கு பற்றிப் பேசிய, மியான்மார் ஆயர் பேரவையின் செயலர் அருள்பணி Maurice Nyunt Wai அவர்கள், ஆங் சான் சூ சி அவர்கள் தலைமையிலான அரசு, நாட்டில் அமைதியை நிலைநிறுத்த முன்னுரிமை கொடுத்துள்ளவேளை, அரசின் முயற்சிகளில், செபங்களோடு, அமைதிக் கருத்தரங்கு வழியாகவும், கத்தோலிக்கத் திருஅவை பங்குபெற விரும்புகின்றது என்று கூறினார்.

மியான்மாரில், ஏறக்குறைய எழுபது ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் ஆயுத மோதல்களுக்குத் தீர்வு காணும் நோக்கத்தில், சூ சி அவர்கள், 2016ம் ஆண்டு ஆகஸ்டில், Panglong அமைதிக் கருத்தரங்கை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : ICN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.