2017-02-14 15:41:00

லாகூர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேராயர் ஷா ஆறுதல்


பிப்.14,2017. பாகிஸ்தானின் லாகூரில், மருந்துக்கடைக்காரர்கள் நடத்திய பேரணி தாக்கப்பட்டதில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு, தனது செபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார், லாகூர் பேராயர் பிரான்சிஸ் ஷா.

இந்த அறிவற்ற வன்முறைச் செயலுக்கு எதிரான தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ள பேராயர் ஷா அவர்கள், துன்பங்களை வருவிக்கும், பயங்கரவாதச் சாத்தானின் செயலால், தங்கள் உறவுகளை இழந்துள்ள குடும்பங்களுடன் தான் ஒருமைப்பாட்டுணர்வு கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இத்திங்களன்று, ஏறக்குறைய 400 மருந்துக்கடைக்காரர்கள் நடத்திய பேரணி தாக்கப்பட்டதில், ஆறு காவல்துறையினர் உட்பட, 13க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், மேலும் 85 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தாக்குதலையடுத்து, லாகூர் உயர்மறைமாவட்டத்தின், எட்டுக்கும் அதிகமான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதோடு, இயேசுவின் திருஇதயப் பேராலயத்திற்கும், காரித்தாஸ் அலுவலகங்களுக்கும், பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக, பேராயர் ஷா அவர்கள் கூறினார்.

பாகிஸ்தானின், பஞ்சாப் சட்டமன்றத்தின் முன்பாக நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாம் அமைப்போடு தொடர்புடைய, Jamat-ul-Ahrar என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

மேலும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் அவர்களும், இத்தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளார்.  

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.