2017-02-21 15:30:00

உலக தாய்மொழி தினம் பிப்ரவரி 21


பிப்.21,2017. கல்வி, நிர்வாகம், கலாச்சாரம், ஊடகம், இணையதளம், வர்த்தகம் ஆகிய எல்லாவற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்க, பலமொழி கல்வி அவசியம் என, ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவன இயக்குனர் இரினா பொக்கோவா அவர்கள் கூறியுள்ளார்.

பிப்ரவரி 21, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக தாய்மொழி தினத்திற்கு செய்தி வெளியிட்டுள்ள, ஐ.நா.வின், கல்வி, கலாச்சாரம் மற்றும் அறிவியல் நிறுவனமான யுனெஸ்கோ இயக்குனர் பொக்கோவா அவர்கள், பலமொழி கல்வி வழியாக, நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வருங்காலங்கள் அமைக்கப்பட முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு, தாய்மொழியிலும், மற்ற மொழிகளிலும் கல்வி கற்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டியது அவசியமென்றும், பொக்கோவா அவர்கள், கூறியுள்ளார்.

கலாச்சார பன்மைத்தன்மை, பன்மொழி ஆர்வம் மற்றும் மொழித்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தில், யுனெஸ்கோ நிறுவனம், 1999ம் ஆண்டு நவம்பரில், உலக தாய்மொழி தினத்தை அறிவித்தது. இத்தினம், இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு பாகிஸ்தானாக இருந்த இன்றைய பங்களாதேஷில், பெங்காளி மொழி அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று, 1952ம் ஆண்டு, பிப்ரவரி 21ம் தேதி டாக்காவில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், காவல்துறையால் மாணவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நாளே, உலக தாய்மொழி தினமாக அறிவிக்கப்பட்டது

இன்று உலகில் ஏறக்குறைய 140 மொழிகள் புழக்கத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.