2017-02-21 14:53:00

நம் தேவைகளை கடவுள் நன்றாக அறிந்திருக்கிறார்


பிப்.21,2017. “நம் தேவைகளை, நம்மைவிட, கடவுள் நன்றாக அறிந்திருக்கிறார், கடவுளின் வழிகளிலிருந்து நம் வழிகள் வேறுபட்டவை என்பதால், நாம் அவரின் வழிகளில் நம்பிக்கை வைக்க வேண்டும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியாயின.

மேலும், திருஅவை என்ற தலைப்பில், ஓர் இத்தாலிய மறைப்பணி வெளியீட்டுக் கழகம் நடத்தும் அருங்காட்சியகத்திற்கு, செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“இயேசுவைச் சந்திப்பவர் எல்லாரின் இதயத்திலும், வாழ்விலும், நற்செய்தியின் மகிழ்வு நிறைவாக இருப்பதாக என, தன் கைப்பட எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும்,  செனெகல் நாட்டின் டாக்கரில், சாஹெல் பகுதிக்கான, திருத்தந்தை 2ம் ஜான் பால் நிறுவனம், பிப்ரவரி 21, இச்செவ்வாய் முதல், ஐந்து நாள்கள் கூட்டம் ஒன்றை நடத்துகின்றது என, திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் துறை அறிவித்துள்ளது.

2016ம் ஆண்டில், ஆறு நாடுகளில் ஏறக்குறைய 5 இலட்சத்து 50 ஆயிரம் டாலர் நிதியுதவி வழங்கப்பட்ட 43 நலத்திட்டங்கள் குறித்து, இக்கூட்டத்தில் ஆராயப்படும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலிய ஆயர் பேரவை, ஜெர்மன் ஆயர் பேரவை மற்றும், உள்ளூர் தலத்திருஅவையின் உதவியுடன், திருத்தந்தையின் பெயரில், நலத்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது, திருத்தந்தை 2ம் ஜான் பால் நிறுவனம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.