2017-02-22 15:52:00

பாசமுள்ள பார்வையில்… உணர்வுகளாலேயே உருவாக்கப்பட்ட மனிதர்


ஒரு பொருளின், நபரின் அருமை, அது, அல்லது, அவர் இல்லாதபோதுதான் அதிகம் அதிகமாக உணரப்படுகிறது. ஒரு தாயின் அருமை, ஒரு மகனுக்கோ, மகளுக்கோ, அவர்களின் வயதான காலத்தில்தான் அதிகம் அதிகமாக மனதில் வருகின்றது. இளம்வயதில், ஓடி, ஓடி சம்பாதித்ததும், தாய்க்கு நேரம் ஒதுக்காமல், ஏன், பலவேளைகளில் தாய் வீட்டிற்குச் சென்று சந்திக்கக்கூட நேரமில்லாமல் சேமித்ததும், கடைசி காலத்தில் ஒன்றுமில்லாமையாகத் தெரிகின்றன. தாய்ப் பறவை, ஊர் ஊராகப் பறந்து சென்று, பூச்சிகளையும் புழுக்களையும் கொத்திக் கொண்டு வந்து, தன் குஞ்சுகளுக்கு உணவூட்டுகிறது. ஆனால், எங்காவது, என்றாவது, எந்தப் பறவையாவது, தன் வயது முதிர்ந்த தாய்ப் பறவைக்கு அவ்வாறு கொண்டு வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறோமா? இல்லவே இல்லை. ஆனால், அதே குஞ்சுப்பறவை, வளர்ந்து பெரிதாகும்போது, தன் குஞ்சுகளுக்கு உணவு ஊட்ட மறப்பதுமில்லை, மறுப்பதுமில்லை.

ஆம். தாய்ப்பாசம் என்பது அதுதான். பிள்ளையின் பாசம், அந்த அளவு ஈடு இணையானதல்ல. தாய்ப் பறவையும், தன் குஞ்சுகளுக்கு உணவூட்டுமேயொழிய, குஞ்சுகளிடமிருந்து அதே செயலை, தனக்கென  எதிர்பார்ப்பதில்லை.  தன் பெற்றோரைக் காக்கவேண்டும் என்ற நிலை, விலங்கினங்களிடம் இல்லை. அத்தகைய உணர்வு, அவைகளிடம் எழுவதில்லை. ஆனால்,  அவைகளிடம் இல்லாத அறிவு, பாசம், கடமையுணர்வு ஆகியவை, மனிதரிடம் உள்ளன. ஏனெனில், அவன் மட்டும்தான் ஆறறிவு படைத்தவன், பாச உணர்வுகளில் இன்பம் காண்பவன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.