2017-02-24 15:50:00

தண்ணீரின் பாதுகாப்பை வலியுறுத்திய வத்திக்கான் கருத்தரங்கு


பிப்.24,2017. தண்ணீரின் பாதுகாப்பை ஊக்குவித்து, அது உலகினர் எல்லாருக்கும் கிடைக்குமாறு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பன்னாட்டு வல்லுனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது திருப்பீடம்.

திருப்பீட அறிவியல் கழகமும், அர்ஜென்டீனாவை மையமாகக் கொண்டுள்ள உரையாடல் மற்றும், கலாச்சார சந்திப்பு மையமும் இணைந்து, தண்ணீரைப் பெறுவதற்கு உரிமை என்ற தலைப்பில், பிப்ரவரி 23, 24 தேதிகளில் நடத்தப்பட்ட பன்னாட்டு கருத்தரங்கில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஐந்து கண்டங்களைச் சேர்ந்த, கொள்கை அமைப்பாளர்கள், அரசு அதிகாரிகள், மதத் தலைவர்கள், முன்னேற்றம் மற்றும் சமூக நீதி ஆர்வலர்கள் என, 90க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

மக்கள் அனைவரும் பாதுகாப்பான குடிநீர் வசதியைக் கொண்டிருப்பது குறித்த உலகளாவிய உரிமை பற்றியும், வத்திக்கானில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் பேசப்பட்டது.

இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட இத்தாலிய மெய்யியலாளர் ஜான்னி வத்திமோ அவர்கள் கூறுகையில், நீர் வளங்கள் மாசடைவதும், உயிர்களுக்குச் சேதம் வருவிக்கும் வகையில், அவை கெடுதலுமே, பெரிய அச்சுறுத்தல் என்று தெரிவித்தார்.

மேலும், இக்கருத்தரங்கில் பங்கேற்ற இந்தியரான ராஜேந்திர சிங் அவர்கள், நவீன பொறியியலும், தொழில் நுட்பமும், நீர்வளங்களை மிக அதிக அளவில் சுரண்டுகின்றன என்று கூறினார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.