2017-02-27 17:03:00

பிறரன்பு பணிகளுக்கு தூண்டுகோலாக இருக்கும் திருத்தந்தை


பிப்.,27,2017. ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை கோவிலுக்கு வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த செயல்பாடு, கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கிய பாதையில் இன்னொரு முன்னேற்றப்படி என்றார் ஆங்கிலிக்கன் ஆயர் Robert Innes.

திருத்தந்தையை வரவேற்று உரை வழங்கிய, ஐரோப்பிய ஆங்கிலிக்கன் சபையின் தலைவர் ஆயர் Innes அவர்கள், தன்னுடைய தலைமைத்துவம் வழியாக, ஆங்கிலிக்கன் திருஅவை அங்கத்தினர்களுக்கும் தூண்டுகோலாக, குறிப்பாக, ஏழைகளுக்கு, குடியேற்றதாரர்களுக்கு, மற்றும் புலம்பெயர்ந்தோருக்குப் பணிபுரிவதில், தூண்டுகோலாக இருக்கும் திருத்தந்தைக்கு தன் நன்றியை வெளியிடுவதாகத் தெரிவித்தார்.

தங்கள் கிறிஸ்தவ மதிப்பீடுகளையும் பாரம்பரியத்தையும், ஐரோப்பிய ஐக்கிய அவையின் அங்கத்தினர் நாடுகள் நினைவில் கொண்டுச் செயலாற்ற வேண்டும் என திருத்தந்தை அழைப்புவிடுத்துள்ளதையும் எடுத்துரைத்த ஆயர் Innes அவர்கள், இரு கிறிஸ்தவ சபைகளுக்குமிடையே உள்ள உறவில், நல்ல முன்னேற்றம் இடம்பெறும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

இந்த சந்திப்பின்போது, உரோம் நகர் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையின் சார்பில் சில நினைவுப் பரிசுகளும் திருத்தந்தைக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. உரோம் நகரில், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையின் 200ம் ஆண்டையொட்டி அச்சிடப்படும் 200 ஆங்கில விவிலியப் பிரதிகளுள் 50 பிரதிகள் திருத்தந்தைக்கு வழங்கப்படும். மனித வியாபாரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, தற்போது கத்தோலிக்க அருள்சகோதரிகளின் கண்காணிப்பில் இருக்கும் பெண்களுக்கு என இது வழங்கப்படும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.