2017-02-28 16:21:00

இலங்கை குடியேற்றதாரத் தொழிலாளருக்கு ஓய்வூதியம்


பிப்.28,2017. வெளிநாடுகளில் பணியாற்றும் இலட்சக்கணக்கான இலங்கை மக்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவிவருவதை முன்னிட்டு, அம்மக்கள் நாடு திரும்பிய பின்னர் அவர்களுக்கு ஓய்வூதியத்தையும், வெளிநாடுகளில் இருந்துகொண்டே ஓட்டளிக்கும் வாய்ப்பையும் வழங்குவதற்கு, இலங்கை அரசு தீர்மானித்திருப்பதை, தலத்திருஅவை வரவேற்றுள்ளது.

ஓய்வூதியத் திட்டம், அரசுத்தலைவர் மற்றும், அமைச்சரவையால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும், இது சார்ந்த ஆவணங்கள், அரசின் பொது வருவாய்த் துறைக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது என்றும், வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் Thalatha Athukorala அவர்கள் தெரிவித்தார்.

அரசின் இந்நடவடிக்கைகளை வரவேற்றுப் பேசியுள்ள, காரித்தாஸ் நிறுவனத்தின் திட்ட அலுவலகர் அருள்பணி Freddi Jayawardana அவர்கள், குடியேற்றதாரத் தொழிலாளர்களுக்காக உழைக்கும் ஒரு நிறுவனம் என்ற வகையில், அரசின் ஓய்வூதியத் திட்டப் பரிந்துரையை, காரித்தாஸ் வரவேற்கிறது எனக் கூறினார்.

குடியேற்றதாரத் தொழிலாளர்கள், இலங்கையின் வெளிநாட்டு வருவாயில் முக்கிய வளமாக உள்ளனர். இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்புப்படி, 2015ம் ஆண்டில், குடியேற்றதாரத் தொழிலாளர்களிடமிருந்து வந்த பணம், 750 கோடி அமெரிக்க டாலருக்கு மேல் எனத் தெரிகிறது. இதில், 55 விழுக்காட்டுத் தொகை, மத்திய கிழக்குப் பகுதி நாடுகளிலிருந்து வந்துள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.