2017-02-28 16:04:00

பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டோருக்கு ஜப்பான் ஆயர்கள் செபம்


பிப்.28,2017. பாலியலில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு கொள்ளும் விதமாக, தவக்காலத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, செபம் மற்றும் தப முயற்சிகளை ஆற்றுவதற்குத் தீர்மானித்துள்ளனர், ஜப்பான் கத்தோலிக்க ஆயர்கள்.

பாலியல் முறைகேடால் பாதிக்கப்பட்டோருக்காக, பிப்ரவரி 21ம் தேதி திருப்பலி நிறைவேற்றி செபித்த, ஜப்பான் ஆயர் பேரவைத் தலைவரான, நாகசாகி பேராயர் Mitsuaki Takami அவர்கள், அருளால் நிறைந்த இறைவா, திருஅவையின் அருள்பணியாளர்கள் இழைத்த பாலியல் குற்றங்களுக்காக மன்னிப்பை இறைஞ்சுகின்றோம் என்று செபித்தார்.

அருள்பணியாளர்களின் தவறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும், அவர்களின் குடும்பங்களின் வேதனைகளில் திருஅவை பங்குகொள்கின்றது எனவும், கிறிஸ்துவிடமிருந்து குணம் பெறுதலை, அவர்கள் அனுபவிப்பதற்கு, திருஅவை அவர்களோடு உடன் பயணித்து, ஆறுதல் அளிப்பதாக எனவும் செபித்தார், பேராயர் Takami.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின்பேரில், பாலியல் வன்கொடுமைக்குப் பலியானவருடன் ஒருமைப்பாட்டுணர்வு கொள்ளும் விதமாக, தவக்காலத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையை, செபம் மற்றும் தப முயற்சி நாளாக அறிவித்துள்ளது ஜப்பான் ஆயர் பேரவை.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.