2017-02-28 16:05:00

வீடற்றவர் நடத்தும் ஓர் இதழுக்கு திருத்தந்தை பேட்டி


பிப்.28,2017. போர் அல்லது பசியால் தங்கள் நாடுகளைவிட்டு ஐரோப்பாவுக்குள் வரும் மக்கள் வரவேற்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட வேண்டும் மற்றும், இம்மக்கள் புலம்பெயர்வதற்கு உரிமையைக் கொண்டுள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மார்ச் 25ம் தேதி, மிலானுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதையொட்டி, இத்தாலிய காரித்தாஸ் நிறுவனத்தின் ஆதரவுடன், வீடற்ற மக்களால் நடத்தப்படும் “Scarp de’ tenis” (ஓசையற்ற மிதியடிகள்) என்ற இதழுக்கு அளித்த நீண்ட நேர்காணலில், இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புலம்பெயர்ந்து வரும் மக்கள், கிறிஸ்தவ நற்பண்புடன் வரவேற்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்த திருத்தந்தை, வீடுகளின்றி இருக்கும் மனிதரை சந்திக்கும்போது,  முதலில் வணக்கம் சொல்லி, நலமா எனக் கேட்பதாகவும், பின்னர் அவர்கள் கூறுவதைக் கேட்பதாகவும் தெரிவித்தார். 

வத்திக்கானில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திருப்பது உட்பட, புலம்பெயரும் மக்களுக்கு எடுக்கப்பட்டுள்ள அண்மை நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்குமாறு கேட்டதற்குப் பதிலளித்த திருத்தந்தை, தனது முயற்சி, உரோம் பங்குத்தளங்கள் வீடற்றவர்களை வரவேற்கத் தூண்டியுள்ளது என்று கூறினார். வத்திக்கானில் இரண்டு பங்குத்தளங்கள், சிரியா நாட்டுக் குடும்பங்களுக்கு உதவுகின்றன என்றும் உரைத்த திருத்தந்தை, இந்நேர்காணல் முழுவதும், ஒருவர் மற்றவர் மிதியடிகளில் நடப்பது பற்றி கூறினார். பிறரது மிதியடிகளில் நடக்கும்போது, தன்னலத்தினின்று நாம் வெளியேறுகிறோம், பிறரது மிதியடிகளில், கடினமான சூழல்களைப் புரிந்துகொள்கிறோம் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

Scarp de' tenis என்ற இத்தாலிய இதழ், 1994ம் ஆண்டு மிலானில், Pietro Greppi என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இந்த இதழ், இத்தாலிய காரித்தாஸ் மற்றும் மிலான் அம்புரோசியானா காரித்தாஸ் நிறுவனங்களின் ஆதரவுடன் வெளியிடப்பட்டு வருகிறது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஏப்ரல் 2ம் தேதி ஞாயிறன்று, இத்தாலியின் கார்பி (Carpi) மறைமாவட்டத்திற்கு, திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இம்மறைமாவட்டம், கடந்த ஆண்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.