2017-03-01 16:03:00

"நான், இனி, இவ்வுலகில், ஒரு சாதாரண திருப்பயணி "


மார்ச்,01,2017. "வாழ்வின் இறுதி நிலையில் இருக்கும் நான், இனி, இவ்வுலகில் ஒரு சாதாரண திருப்பயணி. திருஅவைக்காக செபிப்பது என் முக்கியப்பணி" என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு முன், பிப்ரவரி 28ம் தேதி கூறினார்.

2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி திருஅவையின் தலைமைப் பொறுப்பை துறப்பதாகக் கூறியத் திருத்தந்தை, வத்திக்கான் பாப்பிறை இல்லத்திலிருந்து பிப்ரவரி 28 மாலை கிளம்பி, திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்போவின் மேல்மாடத்தில் தோன்றி, அங்கு கூடியிருந்த மக்களை, திருத்தந்தை என்ற முறையில், இறுதி முறையாகச் சந்தித்த வேளையில், இவ்வாறு கூறினார்.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் தலைமைப்பொறுப்பைத் துறந்த 4ம் ஆண்டு நிறைவன்று, அவருக்காக, உலகின் பல நாடுகளிலும், சிறப்பான செபங்களை எழுப்பி வரும் பல்வேறு குழுக்கள், இச்செவ்வாயன்று தங்கள் செபங்களை வலைத்தளங்கள் வழியே பகிர்ந்துகொண்டனர் என்று, Zenit கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

மேலும், இவ்வாண்டு ஏப்ரல் 16ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தன் 90வது வயதை நிறைவு செய்யவிருக்கும் வேளையில், அவருக்காக சிறப்பான செபங்களையும், நன்றியையும் கத்தோலிக்க வலைத்தளங்கள் வெளியிட்டு வருகின்றன.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.