2017-03-02 15:53:00

கந்தமால் கிறிஸ்தவர்களுக்காக செபிக்கும்படி அழைப்பு


மார்ச்,02,2017. இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள், குறிப்பாக, ஒடிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு, இத்தவக்காலத்தில், தங்கள் செபங்கள் வழியே உறுதி வழங்குமாறு, இந்திய ஆயர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.

ஒடிஸ்ஸாவின் கட்டக் புவனேஸ்வர் பேராயர், ஜான் பார்வா அவர்கள், கந்தமால் கிறிஸ்தவர்கள் வன்முறைகளைச் சந்தித்து 9 ஆண்டுகள் ஆகியும், அவர்கள் உள்ளங்களில் இருக்கும் காயங்கள் இன்னும் ஆறாமல் இருக்கின்றன என்றும், இந்தக் காயங்களை குணமாக்க செபங்கள் தேவை என்றும் கூறியுள்ளார்.

உலகெங்கும் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக செபிக்கும்படி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள மார்ச் மாத செபக்கருத்துடன் தன் விண்ணப்பத்தையும் இணைப்பதாக, பேராயர் பார்வா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

கந்தமால் வன்முறையில் தன் கணவரை இழந்த கனகா ரேகா நாயக் என்பவர், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் செபங்களாலேயே தான் சக்தி பெற்றதாக, பீதேஸ் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.