2017-03-02 15:51:00

குற்றவாளிகளுக்கும், வாழும் உரிமை எப்போதும் உண்டு


மார்ச்,02,2017. கருவில் உருவானதுமுதல், கல்லறை செல்லும்வரை, மனித உயிர் மதிக்கப்படவேண்டும் என்பது, திருஅவையின் அசைவுறாத கருத்து என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் இயங்கிவரும் ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும், பேராயர் Ivan Jurkovič அவர்கள், மரண தண்டனை குறித்து, ஐ.நா. பாதுகாப்பு அவை இப்புதனன்று நடத்திய 34வது அமர்வில் இவ்வாறு உரையாற்றினார்.

மனித உயிர் எந்நிலையிலும் மதிக்கப்பட வேண்டும் என்பதை, தன் உரைகளில் வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குற்றம் புரிந்தவர்களுக்கும், வாழும் உரிமை எப்போதும் உண்டு என்று கூறியதை, பேராயர் Jurkovič அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

தீர்ப்புக்களை வழங்குபவர் மனிதர்கள் என்பதால், தவறுகள் நிகழ வாய்ப்புக்கள் உண்டு என்றும், மரண தண்டனை நிறைவேறியபின், அதை மாற்ற நினைத்தாலும் முடியாது என்றும் கூறிய பேராயர் Jurkovič அவர்கள், மனிதத் தவறால், அப்பாவி உயிர்கள் கொல்லப்படுவதற்கும், மரண தண்டனை வழிவகுக்கிறது என்பதை, வலியுறுத்திக் கூறினார்.

குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகள் தங்கள் வாழ்வை சீரமைக்கவும் அரசுகள் மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கவேண்டும் என்பதே, திருஅவை உலக சமுதாயாத்திற்கு விடுக்கும் விண்ணப்பம் என்று பேராயர் Jurkovič அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.