2017-03-02 15:43:00

துன்புறும் கிறிஸ்தவர் அனைவருக்காகவும் செபிக்க அழைப்பு


மார்ச்,02,2017. கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்திற்காக துன்புறுத்தப்படும் கத்தோலிக்கர், கிறிஸ்தவர், ஆர்த்தடாக்ஸ் சபையினர், அனைவருக்காகவும் செபிப்பதில் தன்னுடன் இணையுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் திருத்தந்தை வெளியிட்டு வரும் செபக்கருத்துக்களின் தொடர்ச்சியாக, மார்ச் மாதத்திற்கென்று திருத்தந்தை வகுத்துள்ள செபக்கருத்து, மார்ச் 2, இவ்வியாழன் காலை, ஒரு காணொளிச் செய்தியாக வெளியிடப்பட்டது.

தங்கள் மத நம்பிக்கைக்காக துன்புறுத்தப்படும் மக்கள், தங்கள் இல்லங்களையும், வழிபாட்டுத் தலங்களையும், தங்கள் உடன்பிறந்தோர், அன்புக்குரியவர்கள் அனைவரையும் இழக்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர் என்று திருத்தந்தை இக்காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

கிறிஸ்தவர்கள் மீது இத்தகைய வன்முறைகளை மேற்கொள்வோர், கிறிஸ்தவர், கத்தோலிக்கர், ஆர்த்தடாக்ஸ் சபையினர் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி, அனைவரையும் துன்புறுத்துகின்றனர் என்றும், திருத்தந்தை இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்களில் எத்தனைபேர் துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக செபிக்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பும் திருத்தந்தை, தன்னுடன் சேர்ந்து செபிக்குமாறும், துன்புறுவோருக்கு உதவிகள் செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

திருத்தந்தையின் செபக்கருத்துக்களை ஒருங்கிணைக்கும் இயேசு சபையினர், The Pope Video வழியே வெளியிட்டிருக்கும் இந்தக் காணொளிச் செய்தியில், திருத்தந்தை இஸ்பானிய மொழியில் பேச, அவரது சொற்கள், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, திரையில் தோன்றுமாறு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.