2017-03-02 15:28:00

வாழ்வில் நுழைந்த கடவுளை நம்புவதற்கு அழைக்கும் தவக்காலம்


மார்ச்,02,2017. வெறும் கருத்தளவில் இருக்கும் கடவுளை நம்புவதிலிருந்து மனமாற்றம் பெற்று, கிறிஸ்துவின் வழியே இவ்வுலகிலும், நம் வாழ்விலும் நுழைந்த கடவுளை நம்புவதற்கு தவக்காலம் நமக்கு அழைப்பு விடுக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை தன் மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றிய திருத்தந்தை, துன்பப்படவும், உதறித் தள்ளப்படவும், கொலை செய்யப்படவும் இவ்வுலகிற்கு தான் வந்ததாக இயேசு கூறும் வார்த்தைகளை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கினார்.

துன்புறும் கடவுள் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு சங்கடங்களை தருவதால், அத்தகையக் கடவுளை விட்டு விலகி, நமது கருத்துக்களுக்கு ஏற்றதுபோல் ஒரு கடவுளை உருவாக்கிக் கொள்கிறோம் என்று திருத்தந்தை தன் மறையுரையில் எச்சரிக்கை விடுத்தார்.

பிறருக்காக தன்னை முழுவதுமாக இழந்த இயேசு, நம்மையும் அத்தகைய தியாக வாழ்வுக்கு அழைக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்த அழைப்பை ஏற்பதற்கு, தவக்காலம் தகுந்ததொரு தருணம் என்று எடுத்துரைத்தார்.

மேலும், "இறைவன் எப்போதும் நம்பிக்கைக்குரியவர், அவர் ஒருபோதும் நம்மை அன்பு செய்வதை நிறுத்துவதில்லை; நாம் அவரைவிட்டு விலகிச் சென்றாலும், நம்மைத் தொடர்ந்து துரத்தி வருபவர் அவர்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக இவ்வியாழனன்று வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.