2017-03-03 15:52:00

பங்களாதேஷின் புதிய சிறார் திருமணச் சட்டத்திற்கு கண்டனம்


மார்ச்,03,2017. பங்களாதேஷ் நாடாளுமன்றம், இவ்வாரத்தில் அங்கீகரித்துள்ள சிறார் திருமணம் குறித்த புதிய மசோதாவிற்கு, தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது, தலத்திருஅவை.

இப்புதிய மசோதா குறித்து, ஆசியச் செய்தியிடம் பேசிய, பங்களாதேஷ் ஆயர் பேரவையின் நீதி மற்றும், அமைதி அவைத் தலைவர் ஆயர் கெர்வாஸ் ரொசாரியோ அவர்கள், சில குறிப்பிட்ட சூழல்களில், சலுகை வழங்கும் இப்புதிய மசோதாவிற்கு இசைவு தெரிவித்திருப்பதன் வழியாக, நாடாளுமன்றம், கடும் தவறிழைத்துள்ளது என்று கூறினார்.

பங்களாதேஷ் அரசு, சிறார் திருமணத்தை முற்றிலும் ஒழிக்கும் என்ற தன் நம்பிக்கையையும் தெரிவித்தார் ஆயர் ரொசாரியோ.

சட்டத்திற்குப் புறம்பே அல்லது விருப்பத்திற்கு மாறாக, சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது போன்ற சில குறிப்பிட்ட சூழல்களில், அச்சிறுமிகளின் மதிப்பைக் காப்பாற்றும்பொருட்டு, சிறார் திருமணத்திற்கு இம்மசோதா அனுமதியளிக்கின்றது.

ஆசியாவில், சிறார் திருமணம் அதிகமாக இடம்பெறும் நாடு பங்களாதேஷ். இந்நாட்டில், திருமணமான பெண்களில் 52 விழுக்காட்டினர் 18 வயதிற்குக் கீழும், 18 விழுக்காட்டினர் 15 வயதிற்குக் கீழும் உள்ளனர் என, ஆசியச் செய்தி கூறுகிறது. 

ஆதாரம் : AsiaNews  / வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.