2017-03-04 16:01:00

உலக மகளிர் தினத்தன்று வத்திக்கானில் மாநாடு


மார்ச்,04,2017. அமைதிக்கு ஆதரவாக, மதநம்பிக்கை கொண்ட பெண்கள் ஆற்றிவரும் நற்பணிகளை உலகுக்கு வெளிப்படுத்தும் நோக்கத்தில், உலக மகளிர் தினமான, மார்ச் 8, வருகிற புதனன்று, வத்திக்கானில் மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.

இயேசு சபையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவும், விசுவாசக் குரல்கள் என்ற கழகமும் இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்து வருகின்றன.

உலக மகளிர் தினத்தன்று, நான்காவது முறையாக, இவ்வாண்டில் நடத்தப்படும் இம்மாநாட்டிற்கு, “தண்ணீர் குறித்த அதிர்வுகளை உருவாக்குங்கள் : இயலாததை இயலக்கூடியதாய் ஆக்குங்கள்” என்பது தலைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாநாடு பற்றி விளக்கிய அதன் அமைப்பாளர்கள், அமைதி பாதுகாக்கப்பட்டு, நீடித்து நிலைத்திருக்க வேண்டுமெனில், பெண்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டுமென்று கூறினர்.

புருண்டி நாட்டு Marguerite Barankitse, அமெரிக்க ஐக்கிய நாட்டு அருள்சகோதரி Simone Campbell, பிரித்தானியாவின் Scilla Elworthy போன்றோர், வத்திக்கானில் நடைபெறவிருக்கும், இம்மாநாட்டில் உரையாற்றவுள்ளனர்.

1993ம் ஆண்டில், புருண்டியில் உள்நாட்டுப் போர் தொடங்கியபோது, பெற்றோரை இழந்த ஏழு சிறாரைத் தத்தெடுத்த Marguerite Barankitse அவர்கள் நடத்திவரும் நிறுவனங்கள் வழியாக, முப்பதாயிரம் சிறாரின் வாழ்வு காப்பாற்றப்பட்டுள்ளது.

அருள்சகோதரி Simone Campbell அவர்கள், “பேருந்தில் அருள்சகோதரிகள்” என்ற அமைப்பின் இயக்குனர். வழக்கறிஞராகிய இவர், குடியேற்றதாரர், ஏழைகள் மற்றும், சமூகத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டவர்களுக்காக உழைத்து வருகிறார்.

“ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வுக் குழு”வை உருவாக்கிய Scilla Elworthy அவர்கள், போரினால் ஏற்படும் துன்பங்களை எடுத்துரைத்து, உலகில், அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட குரல் கொடுத்து வருகிறார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.