2017-03-04 15:42:00

விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் அறிவுரை


மார்ச்,04,2017. இந்தியாவில், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை வெளியிட்டுள்ள உச்சநீதிமன்றம், அதற்கு இழப்பீடு கொடுப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு, அவற்றை எப்படித் தடுப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

விவசாயிகளின் தற்கொலைகள் குறித்த, ஒரு பொதுநல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி J.S.Khehar தலைமையிலான குழு, தற்கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களுக்குத் தீர்வு காண அரசு முயற்சிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

பெருமளவு சாகுபடி செய்யப்படும்போது, விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், வறட்சி அல்லது வெள்ளத்தின்போது பயிர்கள் அழிவதால் இழப்பைச் சந்திக்கிறார்கள் என்றும், தலைமை நீதிபதி தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவுரை குறித்து, கருத்துத் தெரிவித்துள்ள காவிரி டெல்டா விவசாயிகள் உரிமை பாதுகாப்புக் குழுவின் தலைவர் இரங்கநாதன் அவர்கள், உச்சநீதிமன்றம், விவசாயிகளின் வேதனையை முழுமையாகப் புரிந்துகொண்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி, இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளைக் காண வேண்டும் என்று கோரிய இரங்கநாதன் அவர்கள், எல்.ஐ.சி போல, விவசாயிகளுக்கென வேளாண் காப்பீட்டுக் கழகம் (ஏ.ஐ.சி) ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

அதேபோல், மாற்றுப் பயிர் திட்டம் தொடர்பாக, வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும், இரங்கநாதன் அவர்கள் கூறினார்.

இரு மாநிலங்களில், மூன்று மாதங்களில் குறைந்தது 600 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.